கடல்.. காற்று.. கங்குல்..
கடல்.. காற்று.. கங்குல்..
அதென்ன கங்குல்? தேடினேன் கூகுளில், கிடைத்ததோ சங்க இலக்கியப் பயன்பாட்டு உதாரணங்கள்
குறுந்தொகையிலிருந்து,
``கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!``
திருவெம்பாவையிலிருந்து,
``கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க``
திருவாய்மொழியிலிருந்து,
``கங்குலும் பகலும் கண்டுயி லறியாள்``
என்ற பாடல்களின்வழி இரவு, இருள் என பொருள்கொள்கிறது கங்குல்!
`வார்த்தைகளைச் சடாரன்று அடைக்காதீர்கள்` என்ற வரியோடு புத்தகத்தின் முதல் கவிதை ஆரம்பமாகிறது. `புத்தகத்தைச் சட்டென மூடிவிடாதீர்கள், என் கவிச்சொற்கள் உங்களை பரவசமூட்டலாம், ஆச்சரியப்படுத்தலாம்` என்று மின்ஹாவின் அசரீரி கேட்பது போல் இருந்தது!
-----
`ஈரம் உணரப்படாத வறள்நிலத்திற்கு அன்பின் வாசனை ஏது?`
------
`விடைபெறுதல் என எழுதியும்
மை கசிவதை நிறுத்திவிட முடியாமல்
மேசையில் நனையும் காகிதங்கள்`
------
`மிடறு பருகித் தீர்க்கும் தாகமா
இருத்தலின் வெம்பசி`
------
`தீர்க்கமான முடிவுகளின் பின்
சொட்டும் துளிகளில்
வார்த்தைகளின் நகக்கீறல்`
------
`எல்லோரும் விட்டுச்சென்றான பின்
வீசும் காற்றுக்குப் பெயரே ஆறுதல்`
------
`அரிசியில் கூட கல் மண்
நீங்கியதாகப் பிரியப்படுகின்றனர்
மனிதர்களை எப்படிச் சலிப்பது?
இப்படி பரவசப்படுத்திய வரிகள் பல..!
`நிலத்தில் கட்டங்கள் வரைந்து
புள்ளடியிட்டு சதுரங்கள் விளையாடிய
உறவுகள் பிறிதொரு நாளில்
பூமியைப் பிய்த்துக் கொள்ள
வாதாடுகின்றன`
என்று நிகழ்கால உண்மைகளைப் பேசிய கவிதைகள் பல..!
❤
Comments
Post a Comment